Sunday, January 16, 2022

திருநெல்வேலி சுண்டக்கறி தெரியுமா ?

 திருநெல்வேலி சுண்டக்கறி தெரியுமா ?

*பொங்கச்சோறும்_சுண்டக்கறியும்:*

சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும். திருநெல்வேலிகாரன் தின்னு கெட்டான்னு ஒரு சொல் வழக்கு உண்டு

தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொரியல், சிறுகிழங்கு பொரியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.

இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொரியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்பு

பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார் அவியல் பச்சடி அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

இதில் முட்டைகோஸ் பொரியல் இருந்தால் சேர்க்க மாட்டார்கள் அது ஊசிபோயிடும் (கெட்டுவிடும்)

அதென்ன சுண்டக்கறி?

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொரியல் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

இந்த கவலையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

பொங்கச்சோறு:

பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்.

30,000 விதைகள்… 90 நாள்கள்… 62,000 ரூபாய்! பராமரிப்புச் செலவில்லாத பனங்கிழங்கு!

 `தைப்பொங்கல்’ என்றாலே கடித்துச் சுவைக்கக் கரும்பும் பனங்கிழங்கும்தான் நினைவுக்கு வரும். சில பகுதிகளில் பொங்கல் வழிபாட்டில் இடம்பெறும் கிழங்கு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்று.


இக்கிழங்கு கரிசல் மண், செம்மண்ணில் வளரும் என்றாலும், செம்மண்ணில் விளையும் கிழங்குக்குத் தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் சுற்று வட்டார செம்மண் பகுதிகளில் பனங் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கானத்தில் பனங்கிழங்கு சாகுபடி செய்துவருகிறார் மணிமுத்து. பனங்கிழங்கு அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த அவரை `பொங்கல் சிறப்பிதழு’க்காகச் சந்தித்தோம்.

பாத்தியிலிருந்து பனங்கிழங்குகளைத் தோண்டி எடுத்தபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார். “இந்தப் பகுதி முழுக்க வாழை விவசாயம்தான் நடக்குது. வாழை விவசாயத்தோட வருஷா வருஷம் பனங்கிழங்குச் சாகுபடியும் நடக்குது. எங்கப்பா ராஜமாணிக்கம், 30 வருஷத்துக்கு மேல வாழை விவசாயமும், கிழங்கு சாகுபடியும் செஞ்சுகிட்டு வர்றாங்க. இப்போ 11 வருஷமா இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டு வர்றாங்க.


நான் பி.காம் முடிச்சிருக்கேன். காயாமொழியில வாழை, பப்பாளி சாகுபடி செஞ்சுகிட்டு வர்ற சக்திகுமார் அண்ணன்தான் அப்பாவை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினார். அவர் கூட நிறைய இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகள்ல கலந்துருக் கேன். கல்லூரியில படிச்சப்பவே களை எடுக்குறது, இடுபொருள் தயாரிக்கிறது, தெளிக்கிறதுன்னு அப்பாவோட சேர்ந்து தோட்டத்துல எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிச்சேன். உயர்படிப்பு படிச்சு கைநிறையச் சம்பளம் வாங்குற நிறைய பேரு இப்போ இயற்கை விவசாயத்துப் பக்கம் திரும்பிக்கிட்டு வர்றாங்க. அதனால, நானும் விவசாயம் செய்யலாம்ன்னு முடிவெடுத்தேன்’’ அறிமுகம் சொன்னவர் தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘இப்போ ரெண்டு வருஷமா 2 ஏக்கர்ல ஏத்தன், கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். விவசாய நிலத்துக்குள்ளயும், வேலி ஓரங்களிலும் 200 பனைமரங்கள் இருக்கு. இந்தப் பனைகள்ல இருந்து பதனீர் இறக்குறதில்ல. ஆனா, ஒவ்வொரு வருஷமும் பனை சீஸன் முடிஞ்சு கீழே விழுற பனம்பழங்களைச் சேகரிச்சு, பனங்கிழங்கு சாகுபடியை செஞ்சுகிட்டு வர்றோம். எங்க பகுதியில பனங்கிழங்கு சாகுபடியைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்வாங்க. ஏன்னா, இதுல தண்ணி தெளிக்கிறது மட்டும்தான் வேலை. மத்தபடி எந்தப் பராமரிப்பும் தேவையில்ல. இந்த வருஷம் 26,000 பனைவிதைகளைக் கிழங்கு சாகுபடிக்காக ஊன்றியிருக்கேன்” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.


பனம்பழத்தில் விதைகள்

“ஒரு பனம்பழத்துல 3 விதைகள் இருக்கும். போன வருஷம் 10,000 பனம்பழங்களை நடவுக்காகச் சேகரிச்சேன். 30,000 பனைவிதை களை ஊன்றினேன். பன்றித்தாக்குதல், வண்டு அரிப்பு, விளைச்சல் இல்லாத கிழங்குகள்ன்னு அறுவடையில 6,000 கிழங்குகள் பழுதாயிடுச்சு. மீதமுள்ள 24,000 கிழங்களை நேரடியா விற்பனை செஞ்சேன். ஒரு கிழங்கு 3 ரூபாய். அதுமூலம் 72,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. பனம்பழம் சேகரிப்பு, பனைவிதை பிரிச்சு அடுக்கக் கூலி, கிழங்கு தோண்டி எடுக்குற கூலின்னு 10,000 ரூபாய் செலவாச்சு. அதுபோக, 62,000 ரூபாய் லாபமாக் கிடைச்சது. இந்த வேலைகளையும் வீட்டுல உள்ளவங்களே செஞ்சா இந்தச் செலவுத் தொகையும் மிச்சம்தான்” என்றார்.



தொடர்புக்கு, மணிமுத்து,
செல்போன்: 94984 24218

இப்படித்தான் பனங்கிழங்கு சாகுபடி!

பனங்கிழங்கு சாகுபடி செய்வது குறித்து மணிமுத்து கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைதான் பனை பருவம் (சீஸன்). இந்தப் பருவத்துக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்துப் பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். 5 அடி நீளம், 3 அடி அகலம், ஓர் அடி உயரத்தில் பாத்தி அமைக்க வேண்டும். கிடைக்கும் பனை விதையின் எண்ணிக்கையைப் பொறுத்து, எத்தனை பாத்திகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.



பனைவிதைகள் கிழங்குகளாக

குறைந்தபட்சம் ஓர் அடி உயரத்தில் பாத்தி அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் சுலபமாக இருக்கும். சில விவசாயிகள் பாத்தி அமைக்காமல் தரைக்குக் கீழ் கால் முதல் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து, குழிக்குள் விதைகளை அடுக்குவார்கள். இதனால், அறுவடையின்போது கிழங்குகளைப் பிடுங்கி எடுப்பதில் சிரமம் ஏற்படுவதுடன் கிழங்குகள் அதிக எண்ணிக்கையில் சேதாரமாகும்.

பாத்தி எடுத்த பிறகு, 10 கிலோ மட்கிய சாணம், 2 கிலோ வேப்ப இலை, 3 கிலோ அடுப்புச்சாம்பலை (ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். பாத்தியின் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இதன் மேல் இன்னொரு அடுக்கும் அடுக்கலாம். கூடுதலாக அடுக்குவதால் இரண்டு பாத்திக்குச் செலவாகும் தண்ணீர் மிச்சமாகும்.

விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியைக் கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்து விட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாக மூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விட வேண்டும். பாத்தியின் மீது ‘கண் பாகம்’ கீழ் நோக்கி இருக்கும் படி நெருக்கமாக அடுக்க வேண்டும். அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.


பனைவிதைகள் விதைப்பு

தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்குகளில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இப்பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.

20-ம் நாளுக்கு மேல் முளைக்கத் தொடங்கும். 40-ம் நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். 60-ம் நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் தொடங்கும். 90 முதல் 110-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். 90-ம் நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஓரிடத்தில் தோண்டிப் பார்க்க வேண்டும். கிழங்கின் தோல் வெடித்த நிலையில் காணப்பட்டால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். அதிகபட்சமாக 110-ம் நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும்.


Full LockDown At Nellai - நெல்லையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நெல்லையில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.


தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகர பகுதியில் 500 போலீசாரும், மாவட்டத்தில் 2000 போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



முன்னீர்பள்ளம், கங்கைகொண்டான், சீதபற் பநல்லூர், காவல்கிணறு, வன்னிகோனேந்தல், மூன்றடைப்பு உள்ளிட்ட 6 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் 12 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேவையின்றி சாலையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகர பகுதியில் பழையபேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். வாகன ஓட்டிகள் தேவையின்றி செல்வது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவம் தொடர்பான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப் பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லை. மாநகர பகுதியில் உள்ள எஸ்.என். ஹைரோடு, புறவழிச்சாலைகள், திருச்செந்தூர், தூத்துக்குடி சாலைகள் உள்ளிட்டவை வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மட்டும் வழக்கம்போல் நடந்து சென்றனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுரை வழங்கினர்.

சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்பினர் 3 வேளையும் உணவு வழங்கினர்.

களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, அணைக்கட்டுகள் பகுதிகளில் மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த இடங் களும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஓட்டல்களில் இருந்து சாப்பாடு பார்சல்கள் எடுத்துச்சென்று வீடுகளுக்கே கொண்டு கொடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல நெல்லை மாவட்டத்தில் முக்கிய நகரமான அம்பை, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி, திசையன்விளை, ராதாபுரம், உவரி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிய அனுமதிக்கப்படவில்லை.  

இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உவரி, ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அங்கும் சுற்றுலா பயணிகள்  மற்றும் பொதுமக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.