Saturday, October 9, 2021

மாணவர்கள் போராட்டம் காரணமாக நெல்லை மருத்துவ கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் இளநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை மருத்துவ படிப்பு, மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.
இதில் சேர்ந்துள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களில் மூத்த மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக நேற்று மருத்துவ கல்லூரி மாணவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் விடுதிக்குச் சென்று இரண்டு தரப்பு மாணவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் இந்த பிரச்சனையை சமரசமாக முடித்து வைப்பதற்காக வருகிற தசரா விடுமுறை வரை 10 நாட்கள் மருத்துவக்கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலையே ஆண்கள் பிரிவு விடுதியும், பெண்கள் பிரிவு விடுதியும் உடனடியாக மூடப்பட்டது. மாணவ- மாணவிகள் அனைவரும் வெளியேறினார்கள்.இன்று மருத்துவக்கல்லூரி பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Friday, October 1, 2021

மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தியை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

குமரி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தியை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ். 

ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் பகுதியில் உள்ள காற்றாலை பகுதிகளை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: குமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான காற்றாலைகளின் தரத்தை உயா்த்துவதற்கும், புதிய காற்றாலைகளை நிறுவுவது குறித்தும் தகுதியான வல்லுநா்கள் குழுவினரை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

 காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழக மின் வாரியத்திற்கு வழங்குவது குறித்து நன்கு ஆராய்ந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, காற்றாலை மின் உற்பத்தியை நவீன யுக்தியுடன் பெருக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வரும் காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்வதற்காக காற்றாலை உற்பத்திக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்றாா் அவா். ஆய்வின்போது, ஜோதிநாத், மணிகண்டன், ஆலோசகா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாா்டின்ஸ்டெஸ்லா், தோவாளை ஊராட்சித் தலைவா் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், தாணு, முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.