Tuesday, December 16, 2014

கடமை தவறியதால் 15 டி.எம்.சி., நீர் வீண்: வராது வந்த மாமழை மீது கவனம் இல்லை





திருநெல்வேலி : நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், போதிய மழை பெய்தும் கூட அதை சேமிக்கவோ, உரிய முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்தவோ அரசும், அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் செப்டம்பர் வரை, கடும் வெப்பநிலையே நிலவியது. ஜூன், ஜூலையில் பெய்த தென்மேற்கு பருவமழை கூட, எதிர்பார்த்த அளவு இல்லை.கடந்த அக்., 12ல், ஆந்திராவைக் கடந்த, 'ஹுட் ஹுட்' புயல், தமிழகதத்தின் தென்மாவட்டங்களுக்கு, வடகிழக்கு பருவ மழையின் முன்னோட்ட மாக மழையை தந்தது.நெல்லை மாவட்டத் தில், அக்டோபரில் வழக்கமாக, 166 மி.மீ., மழை பெய்யும்; இந்த முறை, 394 மி.மீ., மழை கிடைத்தது. கடந்த நவம்பரில், வரலாறு காணாத மழையாக, ஒரே மாதத்தில், 3,034 மி.மீ., பெய்துள்ளது. டிச., 14 வரை, 1,181 மி.மீ., மழை பதிவாகிஉள்ளது.ஒரு ஆண்டு முழுவதுமே, நெல்லை மாவட்டத்தில் பெய்யும் மழை, 800 மி.மீ., தான். ஆனால், கடந்த நவம்பரில் மட்டும், 3,000 மி.மீ., மழை பெய்தது அருட்கொடை தான்.

இயற்கை தந்த வரம்: இயற்கையின் அருளால், இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், பிசான பருவ நெல் சாகுபடி பணிகள், முழுவீச்சில் நடக்கின்றன.சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம், திசையன்விளை, வள்ளி யூர் போன்ற வறட்சி பகுதி களிலும், இந்த முறை குளங்கள் நிறைந்தன; கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதால், நெல் மட்டுமின்றி புன்செய், பணப்பயிர் விவசாயத்திலும் இறங்கிஉள்ளனர்.இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், 3 லட்சம் ஏக்கரில், விவசாயப் பணிகள் ஜரூராக நடக்கின்றன.நெல்லை பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு என, 11 அணைகளும் நிரம்பி விட்டன.மாவட்டத்தில் முக்கிய அணையான பாபநாசம், மொத்த உயரமான, 143 அடியை எட்டி விட்டதால் தற்போது, 'மிகுதி ஷட்டர்' வழியாக தண்ணீர், தாமிரபரணியில் திறந்து விடப்படுகிறது.

வீணாகிய 15 டி.எம்.சி., :தாமிரபரணியில் வினாடிக்கு, 14,000 கன அடி வீதம், தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. வினாடிக்கு, 11,400 கன அடிவீதம், 24 மணிநேரம் தண்ணீர் வெளியேற்றப்பட்டால், அது ஒரு டி.எம்.சி., ஆகும். கடந்த அக்டோபரில் பெய்த மழையில், தாமிரபரணியில் ஸ்ரீவைகுண்டம் அணையை கடந்து, 5 டி.எம்.சி., தண்ணீர் வீணாகியது. தற்போதும், நவம்பர், டிசம்பரில் அதிகபட்சமாக, ஆற்றில் வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடி வீதம், தண்ணீர் செல்கிறது. எனவே இந்த மழைக்காலத்தில், 15 டி.எம்.சி., தண்ணீர் வீணாக வங்க கடலுக்கு சென்றிருப்பதாக, பொதுப்பணித் துறையினர் கணக்கிட்டுள்ளனர்.

கடமை மறந்த அரசு :'மாமழையை காப் போம்... மழைநீரை சேமிப்போம்' என, அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து, மக்களிடம் மழைநீர் சேமிப்பு குறித்து பிரசாரம் செய்கிறது. ஆனால் இங்கோ, மழைநீரை சேமிக்க ஆர்வம் காட்டவில்லை. நெல்லை மாவட்டத்தில், கடந்த அக்டோபரில் மழை துவங்கும் போதே குளங்கள் நிரம்பின. பராமரிப்பில்லாத குளங்கள் உடையத் துவங்கின.குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஊத்துமலை பெரியகுளம், சங்கரன்கோவில் கரிசல்குளம், செங்கோட்டை முன்னீர்பள்ளம் குளம், மானூர் குளம் ஆகியவை உடைந்து, தண்ணீர் வீணாகியது.எல்லா குளங்களும் உடைந்த பிறகு தான்,அதிகாரிகள், 'வேடிக்கை பார்க்க' சென்றனர். பச்சையாற்றில் கடைசி குளமான திடியூரில் ஏற்பட்ட கால்வாய் உடைப்பை, பொதுமக்களே வீடுவீடாக பணம் வசூலித்து சரி செய்தனர்.

அணைகள் கட்டப்படுமா? நெல்லை மாவட்டத்தில், மழைக்காலத்தில் தண்ணீர் வீணாவதை தடுத்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், சிவகிரி அருகே உள்ளாறு அணைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கேரளாவின் தலையீட்டால், நீண்ட நாட்கள் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நெல்லை அம்பாசமுத்திரம் அருகே, எலுமிச்சையாறு அணைக்கட்டு திட்டம், 61 கோடி ரூபாயில் நிறைவேற்ற திட்டம் தயார்.இதைச் செயல்படுத்தினால் மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதே போல, விக்கிரம சிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியிலும், ஒரு அணைக்கட்டு கட்ட, பொதுப்பணித் துறையினரால் திட்டம் தயார் நிலையில் உள்ளது.அதை செயல்படுத்தினாலும், ஏராளமான நிலங்கள், இரு போக நெல் பாசன வசதி பெறும்.

நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம், ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. மணிமுத்தாறு அணை, காமராஜர் ஆட்சியில் அப்போதைய எம்.பி., கே.டி.கோசல்ராம் முயற்சியில் கட்டப்பட்டது. இவை தவிர கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, வடக்குபச்சையாறு, அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு என, அனைத்து அணைக்கட்டுகளுமே, தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டவை அல்லது அதற்காக நிதி ஒதுக்கி பணிகளை துவக்கி வைக்கப்பட்டவை. தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமும், தி.மு.க., ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்டது தான்; தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கிடப்பில் நதிநீர் இணைப்பு திட்டம்:தமிழகத்தின், முதல் நதிநீர் இணைப்புத் திட்டம் என, கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு இணைப்பு திட்டம்.இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடியில், 6,840 ஏக்கர் தரிசு நிலங்கள், பாசன வசதி பெறும். கிராமங்கள் நீரோட்டம்பெறும். தாமிரபரணியின், கன்னடியன் கால்வாயில், கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளங்குழியில் துவங்கி திடியூர், மூலைக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக ராதாபுரம் அருகே எம்.எல்.தேரி வரை செல்ல, 73 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது.கடந்த 2009 பிப்ரவரி, 21ல், தி.மு.க., ஆட்சியின் போது, 369 கோடி ரூபாய் மதிப்பில் பணி துவங்கியது. வெள்ளங்குழி முதல் மூலைக்கரைப்பட்டி வரையிலும், 35 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கிய, 213 கோடி ரூபாயில் பணி நடந்துள்ளது. கடந்த 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின், நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் நடக்கவில்லை.மூலைக்கரைப்பட்டியில் இருந்து காரியாண்டி, எம்.எல்.தேரி வரை, 35 கி.மீ.,க்கு இன்னமும் கால்வாய் வெட்டப்படவில்லை. தி.மு.க., துவக்கிய திட்டம் என்பதால், அ.தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போட்டுள்ளனர்.தமிழக அரசின் பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கு, 2012 - 13ல், 100 கோடி ரூபாய்; 2013 - 14ல், 156 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன; ஆனால், நிதி வரவில்லை.கடந்த, 2009ல் துவக்கியதை திட்டமிட்டப்படி இந்த ஆண்டின் துவக்கத்தில் முடிந்திருந்தால், தற்போது கடலில் வீணாகிப் போன, 15 டி.எம்.சி., தண்ணீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை மேலும் வளப்படுத்தியிருக்கும்.